முதல் -மந்திரி பினராய் விஜயன் 
செய்திகள்

அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என கேரள முதல் - மந்திரி பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மற்றும் இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல் -மந்திரி பினராய் விஜயன் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்திற்கு பின்னர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீண்டு வர அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஏழைகளுக்கு உதவும் பொருட்டும் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ளவும், நிவாரண உதவிகள் வழங்கவும் அனைவரும் உதவி செய்ய வேண்டும்.

இதற்கு அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பினராய் விஜயனின் கோரிக்கைக்கு அரசு ஆதரவு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால் எதிர்கட்சிகளின் ஊழியர் சங்கங்கள் இதற்கு சில நிபந்தனைகள் விதித்தனர்.

அரசின் கடை நிலை ஊழியர்களிடம் நன்கொடை வசூலிக்க கூடாது. மேலும் அனைவரிடமும் கட்டாய நன்கொடை கேட்க கூடாது என்று கூறினர்.