செய்திகள்

அமெரிக்காவில் போதை மருந்து விற்பவர்களுக்கு மரண தண்டனை- டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்காவில் போதை மருந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் 20 லட்சத்து 40 ஆயிரம் பேர் போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் போதை மருந்துக்கு அடிமையாகி 63,600 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைக்காக பலர் ஹெராயின் போன்ற பொருட்களையும், வலி நிவாரண மாத்திரைகளையும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே, இதை தடுக்க போதை மருந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார்.


நியூஹாம்ஷிர் மாகாணத்தில் மான்செஸ்டரில் நடந்த ஒரு விழாவில் இதை அவர் தெரிவித்தார். டிரம்ப்பின் இப்பேச்சுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அதில் பேசிய டிரம்ப், “போதை மருந்துகளால் பலரது வாழ்க்கை சீரழிந்து வருகிறது. போதை மருந்துக்கு அடிமையாகி மரணம் அடைவதை உடனடியாக தடுக்க வேண்டும்.

அதற்காக சட்டதிருத்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். அத்தகைய நடவடிக்கையில் நீதிதுறை தீவிரமாக உள்ளது. போதை பொருள் கடத்தல்காரர்கள் மீதான நடவடிக்கை எடுக்க கால நேரத்தை வீணாக்க மாட்டோம்” என்றார். #Tamilnews

SCROLL FOR NEXT