செய்திகள்

சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் மிக விரைவில் வாபஸ்- டிரம்ப் அறிவிப்பு

சிரியாவில் முகாமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் போரிட்டு வரும் அமெரிக்க ராணுவம் மிக விரைவில் திரும்ப பெறப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஒகியோவில் அடிப்படை உள் கட்டமைப்பு விழா நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிரியாவில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. தற்போது அவர்களை நரகத்தின் கதவை தட்ட வைத்து இருக்கிறோம். எனவே நாம் சிரியாவில் இருந்து வெளியேறுவோம்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட 100 சதவீத பகுதிகளையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் சிரியாவில் இருந்து நமது ராணுவம் மிக விரைவில் வாபஸ் பெறப்படும்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டு போரிட்டு வருகிறது. இதனால் அங்கு 7 டிரில்லியன் டாலர் (ரூ.450 லட்சம் கோடி) வீணாக செலவிடப்பட்டுள்ளது.

அங்கு நாம் ஒரு பள்ளியை கட்டுவோம். அவற்றை அவர்கள் வெடிவைத்து தகர்ப்பார்கள். நாம் மீண்டும் கட்டுவோம். அதை அவர்கள் இடிப்பார்கள். நாம் மறுபடியும் கட்டுவோம். இதே போன்று அங்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

ஒகியோ, பென்சில்வேனியா அல்லது லோவாவில் பள்ளிகள் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் 7 டிரில்லியன் டாலர் (ரூ.450 லட்சம் கோடி) வீணடித்துள்ளோம். நாம் அங்கு எண்ணையை பெற்றால் பரவாயில்லை. அதுவும் இல்லை.

பெரும்பாலான எண்ணை வளத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெறுகின்றனர். அவர்களுக்காக நாம் ஏன் அங்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அது முட்டாள் தனமானது. நமது ராணுவம் மிக பலம் வாய்ந்தது. அது மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

நாம் நமது நாட்டில் வலுவான கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க் கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். #tamilnews