‘எப்.பி.ஐ’ அமெரிக்காவின் புலனாய்வு துறையாக திகழ்கிறது. அதன் இயக்குனராக ஜேம்ஸ் கோமே பதவி வகித்தார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் இப்பணியில் இருந்தார்.
இந்த நிலையில், நேற்று அவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ‘டிஸ்மிஸ்’ (பதவி நீக்கம்) செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.
அது குறித்து அவர் கோமேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் புலனாய்வு துறையை உங்களால் சரியாக நடத்த முடியவில்லை’ என அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, உங்களை இப்பதவியில் இருந்து நீக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் பதவிநீக்கம் செய்யப்பட்ட தகவலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த புலனாய்வு துறை அதிகாரிகள் கூட்டத்தில் கோமே வெளியிட்டார். இக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது தான் கோமே டிஸ்மிஸ் விவகாரம் வெளியானது. அதை ஒரு அதிகாரி குறிப்பெழுதி அவரிடம் கொடுத்தார்.
அதிபர் தேர்தலின் போது ஐனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் பிரசார இ-மெயில்கள் வெளியாகின. டிரம்புக்கு ஆதரவாக ரஷியா அவற்றை திருடி வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்த விசாரணையில் புலனாய்வு துறை ஈடுபட்டிருந்தது. அதில் அவர் சரிவர ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.