கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் மணப்படையூர் பகுதியில் இன்று காலை ஒரு நாய் வெறி பிடித்து சாலையில் நடந்து சென்றவர்களை விரட்டியது. அப்போது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த பிரபு என்பவரின் மகள் இளந்தென்றல் (வயது 3). என்ற குழந்தையை நாய் விரட்டி சென்று கடித்தது. இதனால் வலிதாங்க முடியாமல் சிறுமி அழுதாள். மகள் அழுகை சத்தத்தை கேட்டு பிரபு வெளியே வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். உடனே நாயை விரட்டி விட்டு குழந்தையை மீட்டார்.
பின்னர் அதே நாய் அப்பகுதியை சேர்ந்த ராம்கி மகள் காவியா (4), சுரேஷ் மகன் சிலம்பரசன் (10) ஆகியோரையும் கடித்து குதறியது. நாய் கடித்ததில் காயமடைந்த 3 குழந்தைகளை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதே போல் மேலும் 2 குழந்தைகளை வெறிநாய் கடித்துள்ளது. அவர்கள் 2 பேரும் சுவாமி மலை அரசு ஆஸ்பத்திரியிலும், பட்டீஸ்வரம் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:-
மக்களை அச்சுறுத்தும் வகையில் கும்பகோணம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews