ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணிக்கெதிராக 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை 17.3 ஓவரில் டெல்லி அணி எட்டிப்பிடித்தது. 3-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் 6 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 43 பந்தில் 97 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 31 பந்தில் 7 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்தார்.
இருவரின் அதிரடியை கண்டு அனைவரும் பூரித்து போனார்கள். வெற்றிக்கு பின்னர் சஞ்சு சாம்சன் கூறிகையில் ‘‘குஜராத் அணிக்கெதிராக என்னுடைய ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினேன். ஒரே ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்த பின், சிங்கிள் எடுக்க நினைத்தேன். அப்போது ரிஷப் பந்த் என்னிடம் வந்து ‘‘அதிகமாக எதையும் பற்றி யோசிக்காதீர்கள். அடித்துக் கொண்டு இருங்கள்’’ என்று கூறினார். அவருடைய நம்பிக்கையான பேச்சுதான், நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியது என்று நினைக்கிறேன். ரிஷப் பந்த் உடன் இணைந்து மகிழ்ச்சியுடன் அனுபவித்து பேட்டிங் செய்தேன்’’ என்றார்.