செய்திகள்

டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் தொப்பி சின்னம் வழங்கக்கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்

டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் தொப்பி சின்னம் வழங்கக்கூடாது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க. மையக்குழு கூட்டம் கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயலாளர் எச்.ராஜா, இல.கணேசன் எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது முதல் கூட்டம் தான் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இதன் முடிவை நாங்கள் மத்திய தலைமைக்கு அனுப்பி இருக்கிறோம். ஆர்.கே.நகர் தேர்தலை எப்படி அணுகுவது?, எதிர்கொள்வது? என்ற முடிவுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை. அப்படி இருக்கும்போது யார் வேட்பாளர் என்பதை இப்போது சொல்லமுடியாது.

ஆனால் இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப எங்களுடைய முடிவு இருக்கும். தேசிய கட்சி என்பதால் எங்களுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. அவசரம் இல்லாமல் தீர ஆலோசித்து முடிவு எடுப்போம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டால் அவருக்கு கடந்தமுறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் வழங்கக்கூடாது. ஏனென்றால் அந்த தொப்பி சின்னத்தை வைத்துதான் அங்கு ஊழலே ஆரம்பித்தது. மிக அதிகப்படியான பணம் அந்த தொப்பியை பிரபலப்படுத்துவதற்காக தான் நடந்தது.

மீண்டும் அவருக்கு தொப்பி சின்னத்தை கொடுக்கும்போது, பழைய முறைகேடுகளின் தொடர்பாகவே தான் இருக்கும். இதை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி மக்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகத்தை நான் வெளிப்படுத்துகிறேன்.

SCROLL FOR NEXT