குவாலியர்:
மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்து அங்குள்ள ஜிவாஜி பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், அரியானா ஆளுநர் கப்டன் சிங் சொலாங்கி, மத்திய மந்திரிகள் தவர்சந்த் கேலாட், நரேந்திர சிங் தோமர், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஜனாதிபதி உங்கள் உடல் பலவீனம் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
உங்கள் உடல் பலவீனம் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள். இந்த உதவிகள் மற்றும் உதவிக் கருவிகள் உங்களுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சார்ந்து இருந்து விடாதீர்கள். உங்கள் மறைக்கப்பட்ட திறமைகளை கண்டுபிடியுங்கள். அவை வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உங்களுக்கு தன்னம்பிக்கையை வழங்கும்.
மத்திய மற்றும் மாநில அரசு சிறப்புத் திறன் வாய்ந்த மக்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களது கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக போராடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 3-ல் இருந்து 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் சரியாக பணியமர்த்தப்படுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். #President #RamnathGovind, #MadhyaPradesh #tamilnews