பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) அனைத்து ரேஷன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
பணமதிப்பு இழப்பின் மூலம் பொருளாதார வீழ்ச்சி அடைய செய்த பா.ஜ.க. அரசை கண்டித்து இம்மாதம் 8-ந்தேதி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது. அனைத்து ஊராட்சிகளிலும் கட்சியின் உறுப்பினர்கள் சேர்க்கையை விரைவு படுத்தி 10-ந்தேதிக்குள் முடிப்பது. இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களும் தீவிரமாக ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வல்லபன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைசாமி, ராஜ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஓவியர்முகுந்தன், ஜெகதீஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, பாடாலூர் சோ.மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.