ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு தி.மு.க. வின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திவாகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்திய மூர்த்தி, தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தி.மு.க. செயலாளர் கார்மேகம் வரவேற்றார்.
கருத்தரங்கில் தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா பேசியதாவது:-
தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்துக்கு போராட்டங்கள் புதிதல்ல. போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்துச் செல்லக் கூடிய, மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கமாக தி.மு.க. இருந்து வந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகாலத்தில் தி.மு.க. சந்திக்காத போராட்டங்களே இல்லை.
இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அந்த மொழி வளருமே தவிர தமிழ் மொழியின் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் போய் விடும். தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியன அழிந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.
அதேபோல ‘நீட்’ தேர்வை இந்த ஆண்டு முதல் மத்திய அரசு அமல் படுத்தியிருக்கிறது. இதை தொடக்கத்திலேயே தடுக்கவும் தி.மு.க. போராடி வருகிறது என்றார்.
கருத்தரங்கில் மதுரை பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல். ஏ.க்கள் முருகவேல், திசை வீரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.