நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக, பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
திமுகவுடனான இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. தேசிய அளவில் பாஜக, 'தாமரை' சின்னத்தில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.
இதையடுத்து காங்கிரஸ் 'கை' சின்னத்தில் 52 இடங்கள் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பிடித்துள்ளது.
மற்ற மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றிப்பெற்று தேசிய அளவில் அதிக மக்களவை தொகுதி உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் திமுக மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.