செய்திகள்

கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களுடன் கருணாநிதி திடீர் சந்திப்பு

கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்தித்து கையசைத்ததால் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மாலை மலர்

சென்னை:

2ஜி வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோரை விடுதலை செய்து சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இது தி.மு.க.வினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, தீர்ப்புக்கு பிறகு கனிமொழி, ராசா ஆகியோர் இன்று சென்னை திரும்பினார்கள். அவர்களுக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் மற்றும் நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்து அவர்களை வரவேற்றனர்.

அதன்பின், கனிமொழி மற்றும் ராசா ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் கருணாநிதியிடம் ஆசி பெற்றனர்.

இதையடுத்து, தனது சக்கர நாற்காலியில் வீட்டின் வாசலருகே வந்த கருணாநிதி அங்கு திரளாகக் குழுமியிருந்த தொண்டர்களை பார்த்து புன்னகையுடன் கையை அசைத்தார். சில மாதங்களுக்கு பின்னர் அவரை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.