மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்த போது எடுத்த படம். 
செய்திகள்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கலெக்டரிடம் திமுகவினர் மனு

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கோரி கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

ஈரோடு:

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி ஆலோசனை பேரில் மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் ஒரு மனு கொடுத்தனர்.

ஈரோடு மாநகரத்தில் பாதாள சாக்கடை பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக 60 வார்டுகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் ஈரோட்டில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடுகள் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலர் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது.

இதனால் டெங்கு மற்றும் வி‌ஷ காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. ரோடுகள் சரியாக மூடப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல இடங்களில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரி செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் மாநகர அவைத் தலைவர் சேகரன், மாநகர துணை செயலாளர் நந்தகோபு, மாநகர பொருளாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி கே.சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் லட்சுமண குமார், வி.சி.நடராஜன், அக்னி சந்துரு, பொ.ராமசந்திரன், நிர்மல் பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT