காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போது நீதிமன்றம் சென்று அதற்கு தடை வாங்கியவர்கள் தி.மு.க.வினர்தான், தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட பயந்து கொண்டு போலி வாக்காளர்கள் என்று புதிய காரணம் சொல்கிறார்கள்.
தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகின்றது. ஆனால் அ.தி.மு.க. என்றும் மக்களையும் தேர்தலையும் சந்திக்க தயாராகவே உள்ளது.
தி.மு.க. என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களால் ஆட்சிக்கு வரவே முடியாது. இலவு காத்த கிளியின் கதைதான் அவர்களுடையது.
கமல்ஹாசனின் அடிக்கடி அந்தர்பல்டி அடிக்கக்கூடியவர் எனவே அவரது விமர்சனங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
அரசியலில் கருத்து கூறும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் அதற்கான பதில் கருத்து நாகரிகமான முறையில் இருக்க வேண்டும். அடுத்தவர் மனது புண்படுமாறு எதிர்கருத்து கூறக்கூடாது.
2003ம் ஆண்டு கந்து வட்டியை ஒழிப்பதற்காக சட்டம் இயற்றியவர் அம்மா தற்போது கந்து வட்டி வசூலிப்பவர்கள் குறித்து பொது மக்கள் அளிக்கும் புகாரின் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் அரசு மருத்துவமனையினை அணுகலாம். அங்கு 24 மணி நேரமும் மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
பசும்பொன் தேவர் ஐயாவின் குருபூஜையின் போது அம்மாவால் செய்து கொடுக்கப்பட்ட தங்கக் கவசத்தினை குருபூஜைக்கு வழங்க அம்மா வழியில் ஆட்சி செய்யும் எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.