ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். பின்பு மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திராபுரத்திற்கு சென்றார். அங்கு அவர் அனைத்து வீதிகளிலும் நடந்தே சென்று ஆதரவு திரட்டினார்.
அப்போது மு.க.ஸ்டாலினுக்கு பல பெண்கள் சால்வை கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்த ஓவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டு ஓட்டுவேட்டையில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது பொதுமக்கள் கொடுத்த பதனீரை மு.க.ஸ்டாலின் அருந்தினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் காமராஜ்நகர் மற்றும் கூட்டாம்புளி பகுதிகளிலும் வீதிவீதியாக நடந்து சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காமராஜ்நகர் பகுதி மக்கள், “தங்களது பகுதியில் தண்ணீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.
பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பதனீர் அருந்திய காட்சி.