கோவை:
கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் ரியாஸ்கான் (வயது 21). இவர் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் நான் அ.தி.மு.க.வில் கோவை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக உள்ளேன். கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி நிர்வாகி ராமமூர்த்தி என்பவர் சமூகவலைத்தளத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு தகவல்களை பதிவிட்டு பரப்பி உள்ளார்.
அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் ராமமூர்த்தி மீது வழக்குபதிவு செய்து கைது செய்துசிறையில் அடைத்தனர். தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று இரவு சிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.