தீ வைக்கப்பட்ட வக்கீல் காரை படத்தில் காணலாம். 
செய்திகள்

தூத்துக்குடியில் நள்ளிரவில் தி.மு.க. வக்கீலின் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

தூத்துக்குடியில் நள்ளிரவில் தி.மு.க. வக்கீலின் கார் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). வக்கீலான இவர் தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளராக உள்ளார். இவர் வழக்கம் போல தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று நள்ளிரவில் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுரேஷ்குமார் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பி விட்டனர்.

இதில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் எழுந்து வந்து இது குறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து நாசமானது.

இச்சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ்குமார் வீட்டின் முன்பு உள்ள கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்த போது, அதில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் காருக்கு தீவைத்து செல்வது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது உட்கட்சி பிரச்சினை காரணமாக காருக்கு தீவைக்கப்பட்டதா? என போலீசார் வீசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தி.மு.க பிரமுகர் காருக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.