செய்திகள்

ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது தி.மு.க.

ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தி.மு.க. தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்கள் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விசயத்தில் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த செம்மலை எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து, தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தகுதிநீக்கம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில், தங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.