தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று திரும்பினார். 2015-ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று வந்தார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி, சென்னை தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
2017 நவம்பர் இறுதியிலும் சிங்கப்பூர் சென்று இருந்தார். பின்னர் குரல் மோசமானதை அடுத்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபகாரன் விஜயகாந்துக்கு மீண்டும் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிப்படுத்த மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு வருவதையொட்டி விஜயகாந்த் மீண்டும் உடல் நலத்துடன் வந்து புத்துணர்வுடன் தமிழ்நாடு முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் அவர் உடல்நலம் தேறி வந்த பிறகு பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வார் என்றும் தெரிவித்தனர்.