மதுரை:
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாசை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரிதாஸ் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரிதாசை கைது செய்யக்கூடாது என போலீசாரை தடுத்தனர். ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் முழக்கமிட்டனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு மாரிதாசை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஒரு சில பதிவுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள், கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றன.
மணிகண்டன் மரணம் தொடர்பாக ஏன் மீடியாக்களில் விவாதம் நடத்தப்படவில்லை, மு.க.ஸ்டாலின் எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பிய மாரிதாஸ், தனது யூடியூபில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதேபோல் டுவிட்டரிலும் தனது கருத்தை காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இதேபோல் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவைத் தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், மாரிதாஸ் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
‘திக, திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை’ என மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார்.