பெரம்பூர்:
புளியந்தோப்பு, ராஜா தோட்டம், முதலாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி ரேகா (வயது 39). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை சந்தோஷ் குமார், திண்டிவனத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குழந்தைகள் மற்றும் தாயுடன் சென்றார். வீட்டில் கோமதி ரேகா மட்டும் தனியாக இருந்தார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கோமதி ரேகா திடீரென தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே இன்று காலை சிகிச்சை பலனின்றி கோமதி ரேகா பரிதாபமாக இறந்தார். கோமதி ரேகா கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதித்து இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேசன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.