வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குருநாத நாயக்கனூர் ஊராட்சி கரட்டுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது35). மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று சாலையூர் நால்ரோடு வந்துவிட்டு மீண்டும் தனது ஊரான கரட்டுபட்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பூலாங்குளம் பிரிவு அருகே நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் முனியாண்டி பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.