குள்ளனம்பட்டி :
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 42). கூலித் தொழிலாளி. இவர் செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பைக்கில் வந்தார்.
வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் கருப்பணசாமி கோவில் அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.