பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள முருகமலை, அகமலை வனப்பகுதியில் கடந்த 1 மாதமாகவே அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்கு சிறுத்தை, காட்டு மாடு, மான் மற்றும் பல்வேறு அரிய வகை விலங்கினங்களும், விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகைகளும் உள்ளன.
முருகமலை வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகான நிலையில் உள்ளது. இதனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்து பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், பாதை வசதி இல்லாததாலும் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இன்று காலையிலும் தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சுமார் 500 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி சேதமடைந்துள்ளது. பல லட்ச ரூபாய் மதிப்பிலான தேக்கு, சந்தனம், தோதகத்தி போன்ற மரங்களும் எரிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வந்த மழை தற்போது முற்றிலும் நின்று விட்டதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ விபத்து தொடர்ந்து வருவதாகவும், எனவே இது போன்ற விபத்துகள் நிகழா வண்ணம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நவீன முறைகளை கையாண்டு தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளனர்.