கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென பற்றிய காட்டுத் தீ அதிக வேகத்துடன் பரவியது.
இதில் பல ஏக்கர் பரப்பிலான மரங்களும், புல்வெளியும் தீக்கிரை யாகின. வனத்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக தீ தடுப்பு எல்லைகளை ஏற்படுத்தி நெருப்பைக் கட்டுப்படுத்தினர்.
வழக்கமாக கோடை காலத்துக்கு முன்னர் அமைக்கப்படும் தீ தடுப்பு எல்லைகளை இந்த ஆண்டு வனத்துறையினர் அமைக்கவில்லை. மேலும் கோடைகால வெயில் அதிகரித்துள்ள நிலையில்கொடைக்கானல் வனத்துறையினர் முன்பே திட்டமிடாததாலும் அஜாக்கிரதையாலும் காட்டுத்தீ பரவ காரணமாக அமைந்துள்ளதாகவும் மலைகிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதேபோல் திடீரென கொடைக்கானல் எம்.எம். தெருப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதுவும் விரைந்து கட்டுப்படுத்தப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் வெப்பம் அதிகரிக்கும் சூழலில் கரடு முரடான மலைப்பகுதியில் வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும். எனவே வெளிநாடுகளைப்போல் ஹெலிகாப்டர் மூலம் சென்று விரைவாக தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.