காட்டுப்பன்றிகள் நாசம் செய்த வாழைகள். 
உள்ளூர் செய்திகள்

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - வனத்துறைக்கு கோரிக்கை

களக்காடு தலையணை மலையடிவாரத்தில்காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.1 வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி கவலையுடன் தெரிவித்தார்.

களக்காடு:

களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

கடந்த 1 வாரமாக வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேஷ் (58) என்பவருக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.

மேலும் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் 1 வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி களக்காடு வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், அதிகரித்து வரும் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT