ஈரோடு ஜவுளிசந்தை வெளிமாநில வியாபாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி மொத்த வியாபாரம் பாதிப்பு

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

ஈரோடு,

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஜவுளிசந்தை இயங்கிவருகிறது. இங்கு தினசரி கடைகளும், வாரசந்தையும் நடந்து வருகிறது.

வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும்.

இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். 

இங்கு சாதாரண நாட்களைவிட விசேஷநாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த சில வாரமாக வியாபாரம் மந்தமாக இருந்து வந்தது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.

குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.

ஆனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில்  வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெறும் 20 சதவீதம் அளவிற்கு மட்டுமே மொத்த விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் சில்லரை விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக நடந்தது.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், செஞ்சி, திருவண்ணாமலை, ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இதனால் இன்று 40 சதவீதம் சில்லரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.