விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

சாகுபுரத்தில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

டி.சி.டபிள்யூ விருந்தினர் மாளிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் தாமஸ் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ விருந்தினர் மாளிகையில் அரிமா சங்கத்தின் சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சாகுபுரம் அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் தாமஸ் மாசிலாமணி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன் அறிக்கை வாசித்தார். டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு உதவி தலைவர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகளையும், சாதனைகளையும் பாராட்டி பேசினார்.

விழாவில் 2 பேருக்கு இலவச சைக்கிளும், ஒருவருக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டன. மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. திரளானோர் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவில் சங்கத்தின் நிர்வாகி சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.