கடையநல்லூர்:
கோடை விடுமுறை முடிந்து நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ -மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக பள்ளி மேலாண்மைக்குழு திருமலை வடிவு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மணிமாறன், வட்டாரக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் முத்துலெட்சுமி, ராமகிருஷ்ணன், மாரி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் தேவராஜ், வட்டார ஆசிரியர் பயிற்றுனர் வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஆயிஷா பானு நன்றி கூறினார்.