உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் வீட்டில் திருடிய மர்ம நபருக்கு வலைவீச்சு

அருப்புக்கோட்டையில் கவுன்சிலர் வீட்டில் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். நேற்று மாலை இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.

மாலை மலர்

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காட்டு பாவா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 40).10-வது வார்டு திமுக கவுன்சிலராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

நேற்று மாலை இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.