விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வன்னிமடை பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி (வயது 42).
இவர் சம்பவத்தன்று தனது கணவருடன் அருப்புக்கோட்டை அஜித்நகரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
அருப்புக்கோட்டை-பந்தல்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தனர்.
ராமசாமி விலக்கு பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் மாரீஸ்வரியிடம் சேலை சக்கரத்தில் சிக்கி இருப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பி கணவன்-மனைவி மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தினர்.
அப்போது மர்ம நபர்கள் திடீரென்று மாரீஸ்வரி கழுத்தில் கிடந்த 2 பவுன் 4 கிராம் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.