உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் திருட்டு

ராஜபாளையத்தில் விவசாயி வீட்டில் திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் பெத்தையாபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 51). விவசாயியான இவருக்கு ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.

தினமும் காலையில் அந்த வீட்டுக்கு சென்று திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று இவர் தங்கை பிரிய தர்ஷினி, வேலைக்கார பெண்ணுடன் அங்கு சென்று சுத்தப்படுத்திவிட்டு வீட்டு கதவை பூட்டி திரும்பி விட்டனர்.

நேற்று காலை வழக்கம் போல் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ரகுநாதன் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளி செம்பு, காமாட்சி விளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.

இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ரகுநாதன் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT