உள்ளூர் செய்திகள்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகி முன்ஜாமீன் மனு

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த சிவகாசி பா.ஜ.க. நிர்வாகி முன்ஜாமீன் மனு செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கிற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாலை மலர்

விருதுநகர்

சிவகாசி நகர பா.ஜ.க. செயலாளர் பாண்டியன் இவரின் மகனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக சிவகாசி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தலைவர் கலையரசன் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு ரெயில் வேயில் வேலை கிடைக்க வில்லை. இதையடுத்து துறை முகத்தில் வேலை வாங்கி தருவதாக சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வேலையும் கிடைக்கவில்லை.

பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவில் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் கலையரசன் கைது செய்யப்பட்டார். சுரேஷ்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்குமார் சிவகாசி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில் இந்த வழக்கிற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும், அதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.