உள்ளூர் செய்திகள்

நெற்பயிர்களில் கருகல் நோய் தடுப்பு ஆலோசனை

நெல் வயல்களில் கருகல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பகுதியில் தென்காசி சாலையில் உள்ள தேவதானம், சேத்தூர் போன்ற பகுதிகளில் ஏக்கர் கணக்கில் நெல் விளைந்த நிலையில் நெல்மணிகளுக்கு பதிலாக காய்ந்த நிலையில் அரிசி இல்லாத நிலையில் கருகல் நோய் காணப்படுகிறது. ஏக்கர் கணக்கில் இது பரவி வருவதால் இதை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் ராஜபாளையம் வேளாண்மை துணை இயக்குநர் (விதை ஆய்வு) வனஜா, பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா, ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். நெல் வயல்களில் சமீபத்தில் பரவி வரும் பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நைட்ரஜன் உரத்தை அளவாக பயன்படுத்துதல், ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட்+டெட்ரா சைக்ஜின்-120 கிராம்+காப்பர் ஆக்ஸி குளோரைடு-500 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க கேட்டுக்கொண்டனர்.

இனிமேல் ஏற்படக்கூடிய நோய்க்கு இந்த பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே காய்ந்த நிலையில் உள்ள வயல்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குமாறு தேவதானம் சேர்த்து ஒரு பகுதி நெல் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.