விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு (வயது 30). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் இருந்தாள். சம்பவத்தன்று ஆனந்தவேலு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி குழந்தையை வீட்டின் அறையில் விட்டு விட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கொதிக்கும் தண்ணீர் இருந்த பாத்திரம் அருகே சிறுமி சென்றாள். அப்போது கொதிக்கும் தண்ணீர் சிறுமி மீது கொட்டியது. வலியால் கதறியழுத மகளை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.