விபத்தில் பலியான சோலைராஜா 
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் லாரி மோதி 2 வயது சிறுவன் பலி

தண்ணீர் லாரி மோதி 2 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது பரிதாபமாக பலியானான்.

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து குமாரவேல் (வயது32) இவரது மனைவி இந்திரா.இவர்களுக்கு 3 வயதில் ஜோதீஸ்வரி என்ற பெண் குழந்தையும், 2 வயதில் சோலை ராஜா என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

இன்று மதியம் இரண்டு குழந்தைகளும் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி தண்ணீர் லாரி அங்கு விளையாடிக் கொண்டி ருந்த சோலை ராஜா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவன் வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தான். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சோலைராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

வீட்டு வாசலில் தண்ணீர் லாரி மோதி ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடப்பதை பார்த்துதாய் இந்திரா கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. 

இதுகுறித்து தகவலறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தி தண்ணீர் லாரியை ஓட்டி வந்த வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி (17 ) என்பவரை கைது செய்தனர். 

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லைசென்ஸ் வாங்காத சிறுவனை வைத்து தண்ணீர் வாகனத்தை இயக்கிய வாகன உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் மேட்ட மலை பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.