சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றக்கோரி திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம் 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐகோர்ட்டு நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம், இரு முறை நேரடியாக வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளது. இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, ஒரு நபர் ஆணையம் அமைத்து 3 மாதங்கள் கடந்து விட்டதாக கூறிய நீதிபதிகள், விசாரணை குறித்து ஆணையத்தின் அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்தனர். பின்னர், விசாரணையை தள்ளிவைத்தனர்.