வேலூர்:
வேலூர் வேலப்பாடி பகவதி மலையில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன், பண்ணபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஸ்ரீமதி பகவதி மலர் அம்மா, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பரணி தீபம் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மாலை 6 மணிக்கு சுமார் 600 அடி உயரமுடைய பகவதி மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.
மலையில் மகாதீபம் ஏற்றிய பின்னர் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
2-வது நாளாக நேற்று மாலை 6 மணிக்கு பகவதி மலை மீது கார்த்திகை தீபம் ஏற்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பட்டாசு, வாணவேடிக்கை நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழ் புகழேந்தி செய்திருந்தார்.