உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் 91.34 சதவீதம் பேர் தேர்ச்சி

17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்தது கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் 9,319 மாணவர்கள், 8,968 மாணவிகள் என மொத்தம் 18,287 பேர் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

இதில் 8,163 மாணவர்கள், 8,541 மாணவிகள் என மொத்தம் 16,704 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.60 சதவீதம் பேரும், மாணவிகள் 95.24 சதவீதம் பேரும் என மொத்தம் 91.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இதில் 23 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளனர்.

கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் 79.80 சதவீதம் தேர்ச்சி பெற்று 38-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவில் 91. 34 சதவீதம் தேர்ச்சி பெற்று 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அளிப்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.

கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.