வேலூர்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தலை தடுக்க காட்பாடி எல்லைப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காட்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் கிறிஸ்டியான் பேட்டை சோதனைச்சாவடியில் பஸ் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது திருப்பதியில் இருந்து வந்த அரசு பஸ்சில் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (வயது53) என்பவரை கைது செய்தனர்.
லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் நேற்று லத்தேரி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்-படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் மயிலாடும்துறை பகுதியைச் சேர்ந்த நீதிராஜன் (49) நதியா (32) என்பது தெரியவந்தது.
அவர்கள் 6 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர். இருவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஆந்திராவில் எந்த பகுதியிலிருந்து தேனியில் யாருக்கு கஞ்சா கடத்தி சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா கடத்தி வரும் சம்பவத்தில் தொடர்ந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.