உள்ளூர் செய்திகள்

அணைக்கட்டு பகுதியில் மணல் கொள்ளை தடுக்க வேண்டும்

குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்

வேலூர்:

வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

அணைக்கட்டு ஒன்றியம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து, டிராக்டர்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்துகின்றனர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயிகள் காலத்திற்கு ஏற்றவாறு பயிர் செய்வதற்கு உண்டான விழிப்புணர்வை தோட்டக்கலை துறையினர் ஏற்படுத்த வேண்டும்.

பிரதம மந்திரியின் விவசாயின் தனிநபர் கடன் ரூ.4 லட்சம் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகள் ஏரியில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். கத்திரிக்காய், தக்காளி, செண்டுமல்லி உள்ளிட்ட உயர்ந்த வகை விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

அமாவாசை பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் கிராமப்புறங்களுக்கு வரும் அரசு டவுன் பஸ்கள் திடீரென நிறுத்தப்படுவதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.