மகளிர் உரிமைத் தொகை ஏ.டி.எம். கார்டுகளை பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள். 
உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக முதற்கட்டமாக 6,000 ஏ.டி.எம். கார்டுகள் வேலூர் கலெக்டர் அலுவலகம் வருகை

3 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்

வேலூர்:

தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற சிறப்பு முகாம்கள் மூலம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களில் 73 சதவீதம் ஆகும்.

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் தவறான தகவல் கொடுத்தவர்களிடம் அதிகாரிகள் வீடு வீடாக சென்று தகவல்களை சரி பார்த்தனர்.

மகளிர் உரிமைத் தொகை பணத்தை பெற வங்கிகள் மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகளில் 6 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகள் வந்துள்ளன.

தற்போது வந்துள்ள ஏ.டி.எம். கார்டுகளை அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் எவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்பது வரும் 15-ம் தேதிக்கு பிறகு தெரியவரும். முதற்க ட்டமாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சரி பார்க்கப்படும்.

மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்க பட்ட வர்களின் சந்தேகங்களை தீர்க்க கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெற நிராகரிக்கப்ப ட்டதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.