உள்ளூர் செய்திகள்

பைக்கில் இருந்து விழுந்தவர்களை தூக்கி விட்ட பெண் உள்பட 2 பேருக்கு அடி-உதை

போதையில் அட்டூழியம் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்


வேலூர்:

வேலூரை அடுத்த பெருமுகை ஆட்டோ நகர் வழியாக நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த பாஞ்சாலி, தணிகாசலம் ஆகியோர் அங்கு ஓடி சென்று 4 பேரையும் தூக்கி விட்டு உதவி செய்தனர்.

அதற்கு 4 வாலிபர்களும் எங்களை எப்படி தூக்கி விடலாம் என்று கூறி பாஞ்சாலி, தணிகா சலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென 4 பேரும் சேர்ந்து சரமாரியாக அவர்களை தாக்கினர்.

இதில், தணிகாசலத்தின் தலையிலும், பாஞ்சாலியின் கைவிரலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 4 பேரையும் பிடித்து அடித்து உதைத்தனர்.பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 வாலிபர்களும் போதை யில் இருந்ததாகவும், அதனால் தான் உதவி செய்த பெண் உள்பட 2 பேரையும் தாக்கினார்கள்.

விபத்தில் கீழே விழுந்தவர்களை தூக்கி விட்டவர்கள் மீது இப்படி தாக்கினால் எப்படி அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் வரும்.அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

குடிபோதையில் தாக்கிய ஒருவர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த மற்ற 3 பேர் யார் என்று தெரியவில்லை.

4 பேரையும் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.