அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த புளியமரத்தூர் அருகே உள்ள கட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 35). இவர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி(40). இவர் நூறு நாள் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் தாமோதரன் நூறு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களை வருகை பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தார். மேலும், பணிக்கு வராதவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு விட்டார்.
அப்போது, ஜெயலட்சுமி பணிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த தாமோதரன் உங்களுக்கு ஆப்சென்ட் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மற்றவங்க லேட்டா வந்தா ஏத்துப்ப நான் லேட்டா வந்த ஆப்செண்ட் போடுவியா என வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரின் கணவர் ராஜேந்திரன் சேர்ந்து பணித்தள பொறுப்பாளர் தாமோதரனை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த தாமோதரன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தாமோதரன் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.