ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பார்வையிட்ட மாணவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பார்வையிட்ட ஆய்வு மாணவர்கள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை புதுக்கோட்டை மாவட்ட ஆய்வு மாணவர்கள் பார்வையிட்டனர்.

மாலை மலர்

செய்துங்கநல்லூர்:

மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 4 மாத காலமாக ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூரில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணியாக இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.இந்த பணியை பல்வேறு தரப்பட்ட ஆய்வாளர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வரலாற்றுத்துறை ஆய்வு மாணவி ஜெயலெட்சுமி தனது ஆய்வுக்காக ஆதிச்சநல்லூருக்கு வந்தார். அவருடன் தொல்லியல் ஆர்வலர் ராம் கார்த்திக், சங்கர்நகர் ஜெயந்திரா பள்ளி கணித ஆசிரியர் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், வரலாற்று ஆசிரியர் கோமதி சங்கர், சென்னை அண்ணா பல்கலைக்கழக மானுடவியல் மாணவர் திருமலை உள்பட பலர் வந்தனர்.

அவர்கள் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்லியல் ஆய்வாளர் அருண் விளக்கமளித்தார்.

அதன்பின் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாணவர்களுடன் ஆதிச்சநல்லூர் கடந்து வந்த பாதை குறித்து விளக்கமளித்தார்.