திருச்சி,
திருச்சி மாவட்டம் எஸ்.பி.யாக வருண்குமார் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் மற்றும் போலீசார் தங்கள் குறைகளை தனது செல்போனில் தெரிவிக்கலாம். மேலும் குற்ற நடவடிக்கைகள் எங்கு நடந்தாலும் தனது தனிப்பட்ட செல்போனுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவல் ரகசியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் திருவெறும்பூர் டி.எஸ்.பி.அலுவலகத்தில் பணியாற்றும் ஏட்டு பிலால் பல மாதங்களாகவே பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக எஸ்.பி.அருண்குமாருக்கு தகவல் வந்துள்ளது.இதனை தொடர்ந்து இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதனை விசாரித்த தனிப்படை போலீசார் அறிக்கையை அருண்குமாரிடம் கொடுத்தனர்.அறிக்கையின்படி ஏட்டு பிலாலை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி.வருண்குமார் உத்தரவிட்டார். அறிக்கை கிடைத்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை அறிந்து போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.