தா.பேட்டை
தா.பேட்டையில் வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியினை தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சர்மிளா பிரபாகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். வட்டார இயக்க மேலாளர் செல்லப்பாப்பா அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டாரம்) ஸ்ரீதேவி, (ஊராட்சிகள்) குணசேகரன் ஆகியோர் சிறுதானிய உணவு வகைகள் குறித்து சிறப்புரை ஆற்றினர். அப்போது கம்பு, சோளம், கேழ்வரகு, கருப்புகவுனி, கற்றாழை, முடக்கத்தான் கீரை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகள் மகளிர் குழுவினர் தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.
மேலும் கண்காட்சியில் சிறப்பாக சிறுதானிய உணவு வகைகள் வைத்திருந்த மகளிர் குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.