உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே பேக்கரி, மருந்து கடைகளில் கொள்ளை

திருச்சி அருகே நள்ளிரவில் பேக்கரி மற்றும் மருந்து கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்கார்த்திகேயன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்

மாலை மலர்

திருச்சி:

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் பேக்கரி மற்றும் அதனை ஒட்டி தனியார் மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

இதில் திருவெறும்பூர் கன்னிமார் கோவில் தெரு வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 39) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல் நேற்று இரவு மேற்கண்ட பேக்கரி மற்றும் மருந்தகங்களை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பேக்கரி மற்றும் மருந்தகங்களின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பேக்கரி கடையின் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.58 ஆயிரம் மற்றும் மருந்தகத்தில் வைத்திருந்த ரூ.6,000, ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து கார்த்திகேயன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பிரபல பேக்கரி மற்றும் மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.