ராம்ஜி நகர்:
திருச்சி சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பை சேர்ந்தவர் அக்பர் பாஷா மகன் பிச்சைக்கனி(வயது47). ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த 26 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சவாரி சென்றுவிட்டு இரவு ஆட்டோவை தன் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்று விட்டார். நள்ளிவில் திடீரென ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூச்சலிட்டனர். கூச்சலின் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த பிச்சைக்கனி ஓடி வந்து பார்த்தபோது ஆட்டோ கொழுந்து விட்டு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிச்சைக் கனி அருகில் இருந்த தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, பேட்டரி கசிவு மூலம் ஆட்டோ தானாக தீ பிடித்ததா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். எரிந்த ஆட்டோவின் மதிப்பு சுமார்2,5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.