தாம்பரம்:
சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் நகரை சேர்ந்தவர் அன்பழகன் கூலி தொழிலாளி இவருடைய மனைவி ஜமுனா வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் அதிரதன் (வயது 12).
அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் அதிரதன் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது துணி காய வைப்பதற்காக பயன்படுத்தபடும் கயிற்றில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாரதா விதமாக அவனது கழுத்தில் கயிறு மாட்டிகொண்டது அப்போது சுதாரித்துக் கொண்டு நிற்க முயன்ற போது கால் வழுக்கியதில் அதிரதன் கழுத்தில் கயிறு பலமாக இறுக்கியது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மயக்க நிலையில் இருந்த அதிரதனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் அதிரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர், அவனது உடலை கைப்பற்றிய பல்லாவரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.